தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: ஆளுநர் ரோசய்யா உரை

2013ம் ஆண்டு பிறந்த பிறகு இன்று தான் தமிழக சட்டசபை முதல் முறையாக கூடுகிறது. இன்று காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தின்போது பல புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடவிருக்கிறது. அதிலும் குறிப்பாக மழை பொய்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சட்டசபை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஒரு வார காலம் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.
இன்று காலை ஆளுநர் உரையைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அவரது உரையின் நகல் புத்தகம் அளிக்கப்படும். அதன் பிறகு வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு சட்டசபை கூடும். கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.
இந்த விவாதத்தின்போது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். கூட்டம் முடியும் நாள் அன்று முதல்வர் ஜெயலலிதா உரை நிகழ்த்துவார். பின்னர் இந்த கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும். அடுத்ததாக தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும்.












Click it and Unblock the Notifications