திமுக உட்கட்சி மோதலில் பொட்டு சுரேஷ் கொலை? போலீஸ் வளையத்தில்மன்னன்! அட்டாக் பாண்டி எஸ்கேப்!!

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தென் தமிழகத்தை ஆட்டுவித்தவர்களில் பொட்டு சுரேஷும் ஒருவர். இவர் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீடு அருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு காரணம் உட்கட்சி மோதலா? அல்லது காண்டிராக்ட் தொழிலில் ஏற்பட்ட போட்டியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மதுரை மேலமாசிவீதி சரவணனிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் மதுரை முன்னாள் துணைமேயரான திமுகவின் பி.எம். மன்னனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொட்டு சுரேஷைப் போல் மதுரையில் வலம் வந்து கொண்டிருந்த திமுகவைச் சேர்ந்த அட்டாக் பாண்டி மீதும் போலீசார் பார்வை திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அட்டாக் பாண்டி எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் அவரது தலைமறைவு தொடர்பாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பொட்டு சுரேஷ் உடலுக்கு திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பொன்.முத்துராமலிங்கம், தளபதி, தேனி மூக்கையா, ஜெயராமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மு.க.அழகிரியின் ஆதரவாளர்களும், பொட்டு சுரேஷுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்த முபாரக் மந்திரி, மருது, இப்ராஹிம் சேட்டு, போஸ் முத்தையா உள்ளிட்டோர் வரவில்லை. இதேபோல் பொட்டு சுரேஷ் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்காத திமுகவினர் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications