2014 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்... சொல்கிறார் ல.தி.மு.க. டி.ராஜேந்தர்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் ல.தி.மு.க. சார்பில் டி.ராஜேந்தர் போட்டியிட்டார். கள்ளக்குறிச்சியில் தங்கியிருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 24.4.2009-ந் தேதி அன்று சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இரவு 10 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் விஜய டி.ராஜேந்தரை, வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் விஜய டி.ராஜேந்தர் கொடுத்த புகாரின்பேரில் ஒன்றிய செயலாளர் சின்னசாமி, குமார், உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் விரைவு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. இதன் விசாரணை தொடர்பாக நேற்று காலை கள்ளக்குறிச்சி வந்த டி.ராஜேந்தர், மாஜிஸ்திரேட்டு ஜெகதீசன் முன்னிலையில் ஆஜராகி இந்த வழக்கில் சமாதானமாகி வழக்கை முடித்துக்கொள்வதாக கூறினார்.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கள்ளக்குறிச்சியில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது எனக்கு எதிராக சிலர் நடந்துகொண்டனர். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். எனவே மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் அந்த வழக்கை சமாதானம் செய்து முடித்துக்கொண்டேன்.
இன்றைக்கு மத்தியில் நடைபெறுகிற காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. மக்கள் விரோதபோக்குடன் டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. உலக வரலாற்றில் பல முறை பெட்ரோல், டீசல் உயர்த்தியது இந்த ஆட்சியில் மட்டும்தான் இருக்கும்.
இதற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எப்போதெல்லாம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் லட்சிய தி.மு.க. போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்படக்கூடிய அணியில் ல.தி.மு.க. இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications