கோவில் பணத்தில் அல்ல அரசு செலவில் அன்னதானம் செய்யுங்கள்: ராமகோபாலன்
சென்னை: அறிஞர் அண்ணாவின் நினைவு நாளுக்கு அன்னதானம் செய்தால் அதை அரசு பணத்தில் செய்ய வேண்டுமே தவிர கோவில் பணத்தில் அல்ல என்று இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசு நிர்வகித்து வரும் கோவில்களில் அன்னதானம் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றுள்ளது. அண்ணாதுரை நினைவு நாளுக்கு சமபந்தி போஜனம் போடுவதை இந்து முன்னணி எதிர்க்கவில்லை. ஆனால் கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவிடாமல் அன்னதானம் போடுவதை இந்து முன்னணி கண்டிக்கின்றது.
அரசாங்கமானது ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களை மீட்டு குத்தகை மற்றும் கடை வாடகைகளை தற்போதைய மதிப்புப்படி வாங்கி கோவில் வருமானத்தை பெருக்க வேண்டும். இனி வரும் காலங்களிலாவது அண்ணாதுரை நினைவு நாளிற்கு பொது இடங்களில் அரசு செலவில் அன்னதானம் போட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.