பசுமாட்டை கடித்த புலி: விசாரணைக்கு சென்ற தாசில்தாரையும் கடித்து குதறியது!
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பசுமாடுகளை தாக்கிய புலி பற்றி விசாரிக்கச் சென்ற தாசில்தார் குழுவினரை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக, கேரள எல்லையில் உள்ள மூலங்காடு பகுதியை சேர்ந்த தம்பி, சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான 2 பசுக்களை புலி அடித்து கொன்றது. இதுகுறித்து விசாரணை நடத்த பத்தேரி தாசில்தார் விஜயன் (53), பள்ளி ஆசிரியர் கிருஷ்ணகுமார் (53), மூலங்காவு பேரூராட்சி தலைவர் ஐயுப்(44), வன ஊழியர் ராஜன் (34), பள்ளி மாணவிபினா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், ஞாயிறன்று மாலை மூலங்காடு பகுதிக்கு சென்றனர்.
கிராம மக்களிடம் புலியின் நடமாட்டம் குறித்து இக்குழுவினர் விசாரித்து கொண்டிருந்தபோது, புதர் ஒன்றில் மறைந்திருந்த புலி அவர்கள் மீது திடீரென பாய்ந்தது. புலியை கண்ட பொதுமக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். தாசில்தார் விஜயனை புலி கடித்து குதறியது. அவரை காப்பாற்ற சென்ற ஆசிரியர் கிருஷ்ணகுமார் மீது பாய்ந்து கடித்ததோடு மாணவி, வன ஊழியர், பேரூராட்சி தலைவர் ஆகிய 5 பேரையும் நகத்தால் கீறியது. இதனையடுத்து பொதுமக்கள் தீப்பந்தங்களுடன் விரட்டவே புலி மீண்டும் வனத்தில் ஓடி மறைந்தது.
படுகாயமடைந்த விஜயன், கிருஷ்ண குமார் ஆகியோரை வனத்துறையினர் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயமடைந்த 3 பேரும் பத்தேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர், கால்நடைமருத்துவர் அருண்சக்காரியா தலைமையில் காட்டிற்குள் மறைந்திருந்த புலியை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அதை திருச்சூரில் உள்ள வன உயிரின பூங்காவுக்கு கொண்டு சென்றனர். தாசில்தாரை புலி தாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்பு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமரம் பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 12 வயது பெண் புலியை வனத்துறையினர் பிடித்து முத்தங்கா சரணாலயத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications