குளித்தலையில் மாதா சிலை உடைப்பு: 2 பேர் கைது
கரூர்: குளித்தலையில் மாதா சிலையை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் அமலாராக்னி நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அன்னை மாதா வேளாங்கண்ணி சிலை வைத்துள்ளனர். இந்த சிலையை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், கிறிஸ்தவர்களும் வணங்கிச் செல்வர்.
இந்த நிலையில் அந்த சிலை அருகே நேற்று முன்தினம் இரவு கலப்பு காலனியைச் சேர்ந்த ஆண்டி என்பவரது மகன் கல்யாணசுந்தரம், ராஜா என்பவரது மகன் ராமன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கினர். அதில் ஒரு கல் மாதா சிலையில் பட்டு கை உடைந்து விழுந்தது.
இது குறித்து பங்கு பேரவை துணைத் தலைவர் ஆரோக்கியசாமி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் மாதா சிலையை உடைத்த கல்யாணசுந்தரம், ராமன் ஆகியோரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications