தமிழகமும், கோவாவும் ஒன்றா?; தமிழகமும், அஸ்ஸாமும் ஒன்றா?.. அதிமுக கொறடா
சென்னை: டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர், புரட்சித் தலைவி, இதய தெய்வம், அம்மா அவர்கள் பேசுவதற்கு குறைவான நேரமே ஒதுக்கினார்கள். அம்மாவுக்கும் கோவா முதல்வருக்கும் 10 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டது. தமிழகமும், கோவாவும் ஒன்றா? என்று சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவு வைகைச்செல்வன் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அரசு தலைமை கொறடாவும் அதிமுக எம்எல்ஏவுமான வைகைச்செல்வன், இலங்கையில் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடந்தபோது அதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதாதவர்கள் தாங்கள் செய்த பாவத்திற்கு புண்ணியம் செய்வதற்காக இன்று ‘டெசோ' நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்காமல் அவர்கள் பாவம் செய்தது உண்மை, மனித உரிமை மீறல் நிகழ்வுக்கு பக்கவாத்தியமாக இருந்தது உண்மை. ஆனால், இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் புரட்சித் தலைவி தான்.
டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர், புரட்சித் தலைவி, இதய தெய்வம், அம்மா அவர்கள் பேசுவதற்கு குறைவான நேரமே ஒதுக்கினார்கள். அம்மாவுக்கும் கோவா முதல்வருக்கும் 10 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டது. தமிழகமும், கோவாவும் ஒன்றா? தமிழகமும், அஸ்ஸாமும் ஒன்றா? தமிழகமும், வடகிழக்கு மாநிலமான திரிபுராவும் ஒன்றாகுமா? பரபரப்பளவில் இந்த மாநிலங்களை விடவும் தமிழ்நாடு பெரிய மாநிலம் அல்லவா என்றார்.