ஜெ. ‘நோ’ சொன்ன பெண்கள் கருப்புப் பூனை படை பாதுகாப்புக்கு ‘எஸ்’ சொன்ன மாயாவதி

பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்ட 17 வி.வி.ஐ.பி.களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பை அளிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்.எஸ்.ஜி. என்ற சிறப்பு படைப்பிரிவு உள்ளது.
இதில் உள்ள கமாண்டோ வீரர்கள் கருப்பு கலர் சீருடை அணிந்திருப்பதால், கருப்பு பூனை என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகின்றனர்.
மாயாவதி, ஜெயலலிதா, சோனியா, மம்தா போன்ற பெண் தலைவர்களுக்கு பெண் கமாண்டோக்களை பாதுகாப்புக்கு அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் கருதியது.
இதையடுத்து கடந்த ஆண்டு, முதன் முறையாக 25 பெண் கமாண்டோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் மாயாவதியும், ஜெயலலிதாவும், தமது பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்களை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை.
இதனால் பயிற்சி பெற்ற பெண் கமாண்டோக்களை எந்த பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் யோசித்து வந்த நிலையில், பெண் கமாண்டோக்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாயாவதியிடம் கடந்த மாதம் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை மாயாவதியும் ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து கடந்த வாரம் முதல் மாயாவதியின் பாதுகாப்பில் ஆண் கமாண்டோக்களுடன் பெண் கமாண்டோக்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பெண் கமாண்டோக்களை பயன்படுத்திக் கொள்வது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் மீண்டும் பேச என்.எஸ்.ஜி. திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications