மீண்டும் அரவையைத் தொடங்கின பாவூர்சத்திரம் அரிசி ஆலைகள்
பாவூர்சத்திரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு அரவையாகும் அரிசி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதே போல் வடமாவட்டங்களில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதால் நெல் மகசூல் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் நெல் தட்டுபாடு ஏற்பட்டு அரிசி ஆலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விழுப்புரம், செஞ்சி, பட்டுகோட்டை, மதுரை போன்ற பகுதிகளில் நெல் மகசூல் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளம், பகுதிக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. பாவூர்சத்திரத்திற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூடைகள் வரை லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அரிசிஆலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளதால் வடமாவட்டங்களில் இருந்து நெல் வரத்து இருந்தால் மட்டுமே ஆலைகள் முழுமையாக இயங்க முடியும் என்றும் தற்போது மீண்டும் மின்தடை அதிகரித்துள்ள நிலையில் ஆலைகளின் இயக்கம் பாதிக்கப்படுகிறது என நெல் வியாபாரிகள் தெரிவித்தனர்.