காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் திடீர் உத்தரவு
தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 9 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை பிப்ரவரி 20-ந் தேதிக்குள் அரசிதழில் வெளியிடவும் ஆணை பிறப்பித்திருந்தது.
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடவில்லை. மேலும் கர்நாடகா அரசு நேற்று கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடவும் இது படிப்படியாக 8 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த நீர் எப்போது திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலிக்கக் கோரும் சீராய்வு மனுவை நாளை மறுநாள் தாக்கல் செய்யப் போவதாகவும் ஷெட்டர் கூறியுள்ளார்.