கும்பமேளாவில் 36 பேர் பலி- பொறுப்பாளர் ஆஸம் கான் ராஜினாமா!
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் கும்பமேளா விழாவில் நெரிசலில் சிக்கி 36 பேர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்று கும்பமேளா பொறுப்பாளர் பதவியில் இருந்து அம்மாநில அமைச்சர் ஆஸம் கான் ராஜினாமா செய்திருக்கிறார்.
மவுனி அமாவாசையை முன்னிட்டு கும்பமேளா நடைபெறும் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் சுமார் 3 கோடி பேர் நேற்று புனித நீராடினர். பின்னர் அவர்கள் தங்களது ஊருக்கு புறப்படுவதற்காக மாலை அலகாபாத் ரயில் நிலையத்தில் திரண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தை ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் இன்று பார்வையிட்டார்.இந்த சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ5 லட்சமும் படுகாயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ1 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.
இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று கும்பமேளா பொறுப்பாளர் பதவியில் இருந்து அம்மாநில அமைச்சர் முகமது ஆஸம் கான் ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு அனுப்பியுள்ளார்.
"கும்பமேளாவிற்காக கடுமையான முயற்சி செய்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் தற்போது நடந்துள்ள இந்த துயர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது' என்று ஆஸம்கான் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications