நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி: மேலும் பலர் பாதிப்பு
நெல்லை: பாவூர்சத்திரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் மகள் மகாலெட்சுமி. அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுககு முன் மகாலெட்சுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
மகாலெட்சுமிக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். பாவூர்சத்திரம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். மேலும் பலர் தொடர்நது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, சுகாதாரத் துறையினர் அங்கு முகாமிட்டு டெங்கு காய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.