மக்களின் அன்பிற்கு வேறேதும் ஈடில்லை.. துபாய் முப்பெரும் விழாவில் ஸ்டாலின்
துபாய்: துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் கடந்த 9ம் தேதி மாலை துபாய் இந்தியன் பள்ளி, சேக் ரசீத் உள்ளரங்கத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இவ்விழாவில் திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி, மதுரை மாநகர் தி.மு.க மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, நாகை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், குடந்தை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மற்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமீரக தேசிய கீதத்துடன் துவங்கிய நிகழ்வில், பிரசித்தம் குழுவினரின் நடனங்கள் மற்றும் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த கரகாட்ட சுரேஷின் கரகாட்டமும் சிறப்பாக நடைபெற்றது.
விருந்தினர்களின் சிற்றுரைகளைத் தொடர்ந்து, பேசிய திராவிடர் கழக தலைவர் திரு.கி.வீரமணி இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவை ஏற்பாடு செய்த அமீரகத் தமிழர்கள் அமைப்பை பாராட்டினார்.
தொடர்ந்து, சிறப்புரை நல்கிய மு.க.ஸ்டாலின், மிசா சம்பந்தமான நினைவுகளை தன் உருக்கமான உரையின் மூலம் பகிர்ந்து கொண்டார். தனக்கு எத்தனை பெரிய பதவிகள் கிடைத்தாலும், மக்களின் அன்பிற்கு வேறேதும் ஈடில்லை என்ற ஸ்டாலின், தமிழின் பெருமைகளை திமுக தலைவர் கருணாநிதியின் அடுக்கு மொழியில் பேசி, அரங்கத்தை அதிரச் செய்தார்.
நிகழ்வின் இறுதிகட்டமாக, ஆடுதுறை பன்னீர் செல்வம் குழுவினரின் பாட்டுமன்றம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் அமீரகத் தமிழ் அமைப்பின் சார்பில் மூர்த்தி வரவேற்புரை நல்க, இவ்விழாவினை தொலைக்காட்சி புகழ் தேவகோட்டை இராமநாதன் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை அமீரகத்தமிழ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அமுதரசன் தலைமையிலான குழு சிறப்பாக செய்திருந்தது. நிகழ்வின் இறுதியில் அமுதரசன் நன்றியுரையாற்றினார்.












Click it and Unblock the Notifications