முதியோர் உதவி தொகை-பார்வையிழந்த தம்பதியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு முதியோர் உதவி தொகை கேட்டு கடந்த 6 மாதங்களாக ஒரு பார்வையிழந்த தம்பதியை அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனராம்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மனைவி காளியம்மாள். இருவரும் பிறவியிலேயே கண் பார்வை இல்லாத மாற்று திறனாளிகள்.
இந்தத் தம்பதிக்கு பார்வதி என்ற மகளும், கருத்தப்பாண்டி என்ற மகளும் உள்ளனர். மகள் காதல் திருமணம் செய்து சென்று விட்டார். மகன் கூலி வேலை செய்து வருகிறார். உழைப்பிற்கு வழியில்லாத மாரிசாமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பித்து கடந்த ஒரு ஆண்டாக உதவி தொகை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மனைவி காளியம்மாளுக்கு உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தும் உதவி கிடைக்காமல் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் நடையாய் நடந்து வருகிறார் மாரிச்சாமி. ஆனால் எந்தப் பயனும் இல்லை.
இதையடுத்து மனு நீதி நாளில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தும் வருவாய் துறை அலுலர்களோ உதவி தொகை வழங்காமல் பார்வை இழந்த அவர்களை அலைக்கழிதது வருகின்றனர்.
இத்தனை தாமதத்திற்குக் காரணம், அதிகாரிகள் எதிர்பார்க்கும் கமிஷன் பணம்தான் அதாவது லஞ்சம்தான். இதுகுறித்து மாரிச்சாமி கூறும்போது எனக்கும், என் மனைவிக்கும் 100 சதவீதம் பார்வை இல்லை என டாக்டர்கள் சான்று வழங்கி உள்ளார்கள். உதவி தொகை கேட்டு கடந்த 6 மாதங்களாக அலைந்து வருகிறோம். ஆனால் ரூ.2 ஆயிரம் தந்தால் உதவி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என வருத்தத்துடன் கூறினார்.












Click it and Unblock the Notifications