கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணுக் கசிவு ஏதும் இல்லை -இயக்குநர் சுந்தர்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அபாயகரமான பொருள் தீப்பற்றி எரிந்து பலர் பலியாகி விட்டதாகவும் கடந்த 2 நாட்களாக நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி பரவியது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
கிராமங்களில் வசிப்போர், குறிப்பாக கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் உள்ள காஸ் சிலிண்டர்களை எடுத்து வெளியே கொண்டு வந்து வைத்து விட்டு இரவு முழுவதும் விடிய விடிய தூங்காமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்எஸ் தகவல் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. மேலும் கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் சுந்தரம், அணு மின் நிலையத்தில் கசிவு ஏதும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அணுமின்நிலையம் இயக்கப்படாத நிலையில் கசிவு எப்படி ஏற்பட முடியும்? கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எந்தவிதமான விபத்துகளும் ஏற்படவில்லை. எந்த கசிவும் ஏற்படவில்லை, ஏற்படவும் செய்யாது.
வழக்கம் போல் அலுவலக பணிகள், பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 4100 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2-வது அணுஉலையில் அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. எனவே இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications