அண்ணாநகரிலிருந்து பிராட்வே நோக்கி வந்த பஸ்சில் திடீர் தீ.. ஒருவருக்கும் காயமில்லை
சென்னை: சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
அண்ணா நகர் மேற்கிலிருந்து பிராட்வேக்கு இன்று ஒரு பேருந்து போய்க் கொண்டிருந்தது. பஸ்சில் பயணிகள் கூட்டம் இல்லை. வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே பஸ் வந்தபோது திடீரென என்ஜின் பகுதியிலிருந்து தீ வந்தது. கரும்புகையும் கிளம்பியது.
இதையடுத்து டிரைவர் திராவிட மணி பஸ்சை நிறுத்தி விட்டு தீயை அணைக்க முயற்சி்ததார். ஆனால் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து அனைவரும் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினார்கள். சிலர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீவிபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நல்ல வேளையாக யாருக்கும் இந்த தீவிபத்தி்ல காயம் ஏற்படவில்லை.