திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது
திருப்பூர்: திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
லட்சத்தீவில் இருந்து கர்நாடகாவை ஒட்டி இருக்கும் அரபிக்கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளது. இதனால் நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
திருப்பூர் நகரில் விடிய விடிய இடியும் மின்னலுமாய் மழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஜம்மனை, நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் அனைவரும் மேட்டுப்பாங்கான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
ஈரோட்டில் 4 மணிநேரம் மழை
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் 12 மணிக்கு மழை பெய்தது. அதிகாலை 4 மணி வரை கிட்டத்தட்ட 4 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இந்த பலத்த மழையால் பு.புளியம்பட்டி தங்கசாலை வீதி நந்தவனம் பகுதியில் உள்ள 50 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. அந்தப்பகுதி வெள்ளக்காடானது. இதில் ரங்கன் என்பவரது வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் இதன் அருகே உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் சுவர் இடிந்ததால் எந்த பாதிப்பும் இல்லை.
நிரம்பிய குளங்கள்
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் நிலைகளிலும் தண்ணீர் சேர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும் புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் குளம் நிரம்பும் தருவாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் காரைப்பாடி பள்ளத்தில் மழை நீர் சீறிய பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. மேலும் காவிலிபாளையம் குளத்திலும் மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோபி பகுதியில் பெய்த பலத்த மழையால் வாணிப்புத்தூர் அருகே உள்ள அருங்காட்டு குரையில் 30 வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. பல பகுதிகளில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பலத்த மழையால் அந்தியூர் பகுதியில் 600 வாழைகள் முறிந்து விழுந்தது.
அதிகாலை வரை நீடித்த மழை படிப்படியாக குறைந்தது. எனினும் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது.