டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையை தொடங்குகிறது மலேசியாவின் ஏர் ஏசியா!

விமான சேவை துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ், மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க முனைப்பு காட்டின.
அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்தது. இருப்பினும் இரு நிறுவனங்களிடையே பங்கு பரிமாற்றத்தில் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனமும் டாடா குழுமமும் இணைந்து இந்தியாவில் விமான சேவையை தொடங்க முடிவு செய்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டின் நான்காம் காலாண்டில் இந்த விமான சேவைகள் தொடங்கப்படக் கூடும். இதற்காக இந்தியாவில் சுமார் 30 முதல் 50 மில்லியன் டாலர் அல்லது ரூ250 கோடியை முதலில் முதலீடு செய்கிறது ஏர் ஏசியா.
மேலும் ஏர் ஏசியா நிறுவனம் 49% பங்குகளையும் டாடா சன்ஸ் குழுமம் 30% பங்குகளையும் தங்கள் வசம் வைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் விமான சேவையை இயக்கத்தில் டாடா குழுமம் எந்த ஒரு பங்கையும் வகிக்காது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏர் ஏசியாவின் தலைவர் டோனி பெர்னான்டஸ், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெருமிதப்பட்டார்.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் பங்குகள் சரிவை சந்தித்தன. ஏனெனில் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனமானது ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகளை வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்துடன் ஏர் ஏசியா இணைவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் ஸ்பைஸ் ஜெட்டின் பங்குகள் சரிவை சந்தித்தன.












Click it and Unblock the Notifications