ஹைதராபாத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு?... பலி 15 ஆனது
நேற்று இரவு 7 மணியளவில் ஹைதராபாத்தின் மக்கள் நெருக்கடி நிறைந் சந்தைகள், தியேட்டர்கள் நிரம்பிய பகுதியான தில்சுக் நகரில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதனால் மக்கள் சிதறி ஓடினர். பலர் குண்டுவெடிப்பில் சிக்கிய காயமடைந்தனர்.
இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்கிறதா? என்பதை அறிய வெடிகுண்டு சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சைக்கிள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில்தான் ஒரு குண்டு வைக்கப்பட்டு இருந்ததாக கருதப்படுகிறது. மற்றொரு வெடிகுண்டு, டிபன் பாக்ஸ் குண்டு ஆகும். சிதைந்த நிலையில் அந்த டிபன் பாக்ஸ் கண்டெடுக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் ஒரு குண்டு கண்டுபிடிக்கபப்ட்டது.
குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக, தேசிய புலனாய்வு ஏஜென்சி, என்.ஐ.ஏ நிபுணர்கள் குழு, தனி விமானம் மூலம் விரைந்தது. இக்குழு, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் மாதிரிகளை சேகரித்தது.
குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு அருகே குண்டுவெடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.