அம்மா பிறந்தநாள் காவடி, பால்குடம் வருது: ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத போலீசார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் போலீசார் ஆம்புலன்ஸுக்கு வழிவிடவில்லை.
முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாளை அதிமுகவினர் நேற்று சிறப்பாக கொண்டாடினர். அவரின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவில் வளாகத்தில் கூடிய அதிமுகவினர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். அதன் பிறகு முளைப்பாரி, பால்குடம், காவடி எடுத்து அவர்கள் திருவப்புர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சாலை முழுவதும் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தெளிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அவசர சிகிச்சைக்காக ஒரு நோயாளியை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வந்தது.
அதை வழிமறித்த போலீசார் இந்த வழியில் காவடி, முளைப்பாரி, பால்குடம் எடுத்து வருகின்றனர் அதனால் வேறு வழியாக செல்லவும் என்றனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வேறு வழியாக சுற்றிச் சென்றது.