தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது?... மார்ச் 15 என தகவல்!
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்திய அரசின் பொது பட்ஜெட் 28ம் தேதி தாக்கலாகிறது. இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் மத்தியில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
மார்ச் மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு சட்டசபையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது அவசியமாகும். அதன் பிறகு துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது ஒரு மாத காலத்துக்கு மேல் விவாதம் நடைபெறும்.
ஒவ்வொரு நிதியாண்டும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது, மார்ச் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 15-ம் தேதியன்று தாக்கல் செய்வார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்புத் திட்டங்களான மாணவர்களுக்கான விலையில்லா லேப்-டாப், பெண்களுக்கான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றைக் கூடுதலாக கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் 25 லட்சம் விலையில்லாத மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான இலக்கு எட்டப்பட்டு வருகிறது.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 18-ல் தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் எனத் தெரிகிறது. இதன்பின், ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியை ஒதுக்க வகை செய்யும் மானியக் கோரிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும்.












Click it and Unblock the Notifications