ரயில்வே பட்ஜெட்டை கிழித்து சபாநாயகர் மீது வீசிய எம்.பி: உரையை வாசிக்க திணறிய பன்சால்
மத்திய ரயில்வே அமைச்சர் நேற்று லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் அறிவிப்புகளை வாசிக்கத் துவங்கியதும் உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் அவர் தொழிற்சாலைகள் பற்றி அறிவிப்புகள் வெளியிட்டபோது எதிர்கட்சியினர் முணுமுணுக்கத் துவங்கினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் எழுந்து அவையின் மையப் பகுதிக்கு சென்று ரயில்வே பட்ஜெட்டை வாபஸ் பெறக் கோரி கோஷமிட்டனர்.
இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், இடதுசாரி எம்.பி.க்களும் அவையின் மையப் பகுதிக்கு சென்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷமிட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ரயில்வே பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஆர்.கே. சிங் பட்டேல் பட்ஜெட்டின் சில பக்கங்களை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசினார்.
இது ரயில்வே பட்ஜெட் அன்று ரேபரேலி பட்ஜெட் என்று பாஜகவினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் இருந்த பிரான்சிஸ்கோ சர்டின்கா எம்.பி.க்களை சமாதானப்படுத்த முயன்றார். அவை உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பன்சால் பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் விழித்தார். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் பன்சாலுக்கு ஒரு துண்டுச் சீட்டு அனுப்பினார். அதைப் பார்த்த அவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக அறிவித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.
பன்சால் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்பதால் தனது பட்ஜெட்டில் பஞ்சாபிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர். அவர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சபாநாயகர் மாடத்தில் உட்கார்ந்து அவரது குடும்பத்தினர் அவை நிகழ்ச்சியை பார்த்தனர். அவர்களுடன் ராஜ்யசபா எம்.பி.க்கள் சிலரும் அமர்ந்திருந்தனர். பன்சால் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.