காவிரி விவகாரம்: ஜெயலலிதாவை கருணாநிதி பாராட்ட வேண்டும்- 'திமுக' அரங்கநாயகம் அறிவுரை
சென்னை: காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு இடையே அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதாக திமுக தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அரங்கநாயகம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது இவர் திமுக தேர்தல் பணிக் குழு உறுப்பினராக உள்ளார். மேலும், திராவிட எழுச்சிப் பேரவை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சாமிநாதன், ராஜா முகமது இணைந்து காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது,
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராக பெரும் சட்டப் போராட்டம் நடத்தினார். கர்நாடகாவில் நிலவும் தேர்தல் அரசியலுக்கு, காவிரி பிரச்சனையை அம்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
இருந்தும், உச்ச நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்து தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக ஜெயலலிதாவை மனம் திறந்து பாராட்ட வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து திமுக தலைவர் கருணாநிதியும் முதல்வரை பாராட்ட வேண்டும்.
தமிழக பிரச்சனைகளில் திமுக-அதிமுக இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட வேண்டும். இதற்கு அரசியல் நாகரிகத்தை இரு கட்சியினரும் பின்பற்ற வேண்டும் என்றனர்.
இந்த பேட்டியின் மூலம் அரங்கநாயகம் அதிமுகவில் இணைய வெளிப்படையாக தூது விட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications