ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. சந்திப்பு-விஜய்காந்துக்கு டென்சன்.. டென்சன்!

தேமுதிக எம்எல்ஏக்களான ஆர்.சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), நடிகர் அருண் பாண்டியன் (பேராவூரணி), தமிழழகன் (திட்டக்குடி) ஆகிய 4 பேரும் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து 'தொகுதி பிரச்சனை' குறித்து மனு கொடுத்தனர்.
இந்த சந்திப்பை அடுத்து இந்த 4 பேரும் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். சட்டசபையில் இந்த 4 பேருக்கும் ஒரே இடத்தில் வரிசையாக அமர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது முதல்வர் ஜெயலலிதாவையும் அதிமுக ஆட்சியையும் பாராட்டிப் பேசி தாங்கள் தேமுதிகவில் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தினர் இந்த 4 பேரும். இவர்களுக்கும் தேமுதிக எம்எல்ஏக்களுக்கும் இடையே சட்டசபையிலேயே அடிதடி கூட நடந்தது.
இந் நிலையில் இன்று செங்கம் தொகுதி தேமுதிக எம்எல்ஏவான டி.சுரேஷ்குமார் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் தேமுதிகவைச் சேர்ந்த செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.சுரேஷ் குமார் நேரில் சந்தித்தார். மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும், கர்நாடகத்தின் பிடிவாதப் போக்கினையும் மீறி சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, மகத்தான சாதனை புரிந்தமைக்கு தனது சார்பாகவும், தன் தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications