ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு- தொலைத் தொடர்புத் துறை மீது வாஹனவதி புகார்- ஆ. ராசா மறுப்பு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு காலத்தில் தற்போதைய அட்டர்னி ஜெனரல் வாஹனவதி, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். அவர் மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் தொலைத் தொடர்பு தீர்ப்பாயம் ஆகியவற்றில் ஆஜராகிவந்தார்.
தற்போது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் நீதிபதி ஓ.பி.சைனியிடம் நேற்று வாஹனவதி கூறியதாவது:
2008-ஆம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விண்ணப்பங்கள் பற்றி தொலைத் தொடர்புத் துறை ஒரு செய்திக் குறிப்பைத் தயாரித்து அதை ஜனவரி 7-ந் தேதி என்னிடம் காட்டி ஒப்புதல் பெற்றது. அப்போதைய தொலைத் தொடர்புச் செயலாளர் சித்தார்த் பெஹுராவே நேரடியாக என்னிடம் காண்பித்தார். ஆனால் ஜனவரி 10-ந் தேதி பத்திரிகைகளில் அந்த செய்திக் குறிப்பு வெளிவந்தபோது அதில் என்னிடம் காண்பிக்கப்பட்ட வரைவில் இருந்த சில பகுதிகள் இல்லை. ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்த 2 நிறுவனங்களுக்கு ஒரே தகுதி இருந்தால் அவற்றில் எந்த நிறுவனம் முதலில் விண்ணப்பித்துள்ளதோ அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது பற்றி என்னிடம் கூறவில்லை.
என்னிடம் ஒப்புதல் பெற்ற பிறகு அந்த செய்திக் குறிப்பில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது எனக்கு தெரியாது என்றார் அவர்.
ஆனால் ஆ. ராசா தரப்பு வழக்கறிஞர் இதை நிராகரித்து வாஹனவதியின் சாட்சியம் பொய்யானது என்பதால் தமது பொறுப்புகளில் இருந்து அவர் நழுவப் பார்க்கிறார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications