நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திய நபரை வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற போலீஸ்…
ஜோகன்னஸ்பெர்க்: தென்னாபிரிக்கா போலீஸார் தமது வாகனத்தில் ஒரு நபரை கட்டி வைத்து இழுத்து சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் போலீஸாரினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் பின்னர் சிறையில் உயிரிழந்திருப்பதால் இந்த பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
தென்னாபிரிக்காவின், ஜோகன்னஸ் பெர்க் நகரிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள டொவிடொன் பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்த நபர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவராகும். 27 வயதான அவர் டிரைவராக வேலைபார்த்து வந்த அந்த நபர் தனது வாகனத்தை நோ பார்க்கிங் இடத்தில் நிறுத்தி வைத்ததற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரது கைகளை தமது வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். போலீஸாரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டுக்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் அதையும் மீறி போலீஸார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னர் அந்நபர் சிறைச்சாலையில் உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவத்தின் வீடியோ காட்சி தான் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்க போலீஸாரின் இந்நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications