அருண் ஜேட்லி தொலைபேசி ஒட்டுக் கேட்பு: பாஜக தலைவர்கள் உடந்தை?

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான அருண் ஜேட்லியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாக டெல்லியைச் சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனத்தின் நிர்வாகி அனுராக் சிங் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அனுராக் சிங்கின் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன. அருண் ஜேட்லியை மட்டுமல்ல.. மொத்தம் 60 பேரின் தொலைபேசி விவரங்களை அனுராக்சிங் தமது கணிணியில் பதிவு செய்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதில் பல பாஜக தலைவர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களின் தொலைபேசிகளும் அடக்கம்.
பாஜகவின் மிட்டலுக்கு தொடர்பு?
இதில் சில பாஜக தலைவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாஜக நிர்வாகியுமான சுதன்ஷூ மிட்டல், அனுராக் சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் தொலைபேசிகளை ஏன் அனுராக் ஒட்டுக் கேட்டார் என்பது தமக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார். இதனால் அனுராக்சிங், மிட்டல் இடையேயான தொடர்பு குறித்து டெல்லி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நிதின் கத்காரிக்கு எதிராக சதி?-லலித் மோடியின் டெலிபோனும்...
இதேபோல் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் நாக்பாலும் அனுராக் சிங்குடன் தொடர்பில் இருந்துள்ளனர். அனுராக் சிங் ஒட்டுக் கேட்ட பட்டியலில் மும்பை தொழிலதிபரான நிதின் ஷா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோரது தொலைபேசிகளும் அடக்கம்.
நிதின் ஷா என்பவருக்கு டெல்லியில் இருக்கும் விவேக் நாக்பாலுக்கும்தான் தொழில் போட்டி. இதில் நிதின் ஷாவும் லலித் மோடியும் நெருக்கமானவர்கள். இதனால் டெல்லியைச் சேர்ந்த விவேக் நாக்பாலுக்காக நிதின் ஷா, லலித் மோடி ஆகியோரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதா என்ற சந்தேகமும் வலுத்திருக்கிறது.
அனுராக் சிங் பட்டியலில் மும்பை லலித் மோடி, நிதின் ஷா இருப்பதால் இவர்களுக்கும் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரிக்குமான உறவு குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் பதவியில் இருந்து நிதின் கத்காரியை வெளியேற்ற முயற்சித்த பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும் அனுராக்சிங், மிட்டல் ஆகியோருக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாஜக கருத்து
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் பாஜகவினரிடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் இதை எழுப்பியுள்ளோம். உண்மைகள் வெளியே வர வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
ஆனால், பாஜகவைச் சேர்ந்த மிட்டலுக்கும அனுராக் சிங்குக்குமான தொடர்பு குறித்து ரவிசங்கர் பிரசாத் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அரசியலில் பெரும் புயலைக் கிளப்பக் கூடிய வகையில்தான் அனுராக் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் அமைந்திருக்கிறது!












Click it and Unblock the Notifications