Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது!

Subscribe to Oneindia Tamil

No fire zone
ஜெனீவா: ‘நோ பயர் ஸோன்' என்ற போர்க்குற்ற ஆவணப்படம் இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் முன்பு நேற்று திரையிடப்பட்டது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக திங்களன்று முக்கிய விவாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், இறுதிக்கட்ட போரின் போது போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்து, இனப்படுகொலை செய்தது.

இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா. வல்லுனர் குழு, அறிக்கை அளித்தது. உயிருக்கு பயந்து போர் இல்லாத மண்டலங்களில் தஞ்சம் புகுந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது உலக நாடுகளை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் நிர்வாண நிலையில், கைகள் கட்டப்பட்டு கூட்டம், கூட்டமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை வெளியிட்டு இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து இலங்கையில் தேசிய செயல் திட்டம் என்ற ஒன்றை அதிபர் ராஜபக்சே ஏட்டளவில் கொண்டு வந்தார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை அரங்கேற்றிய இலங்கை ராணுவத்தைக் கொண்டே போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக இலங்கை ராணுவம், பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது.

இப்போது மீண்டும் சேனல்-4 தொலைக்காட்சி, ‘ நோ பயர் ஸோன்' என்ற தலைப்பில், இயக்குனர் கல்லம் மெக்ரேயைக் கொண்டு போர்க்குற்ற ஆவணப்படம் ஒன்றை மீண்டும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, பதுங்குகுழியில் 2 அடி தூரத்தில் நிற்க வைத்து சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் கடந்த 27-ந் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் 2 தினங்களுக்கு முன் பேசிய இலங்கை அமைச்சர் சமரசிங்கே, இலங்கைக்கு எதிரான எந்த ஒரு விவாதத்துக்கும், தீர்மானத்துக்கும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினார். சேனல்-4 ஆவணப்படத்துக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை காட்சி இடம் பெற்றுள்ள நோ பயர் ஸோன் ஆவணப்படம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நேற்று திரையிடப்பட்டது. இதைக் கண்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

‘‘போர்க் குற்றங்களால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தன்மானத்துடன் வாழ உலக நாடுகள் உதவ வேண்டும்'' என்று இந்த ஆவணப்படத்தை எடுத்த இயக்குனர் கல்லம் மெக்ரே உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் திங்கட்கிழமை தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பேரில் விவாதம் நடைபெறும். விவாதத்தை தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெறும். இந்த தீர்மான விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி ராஜ்ய சபாவில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின் மீதான தன் நிலைப்பாட்டைக்கூட அது அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+