முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் இன்று பாராட்டு விழா
தஞ்சை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சையில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது.
மத்திய அரசிதழில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடச் செய்ததற்காகவும், தமிழகத்திற்கான காவிரி நீரை உச்ச நீதிமன்றம் மூலம் பெற்று தந்ததற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவை 27.2.2013 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காவிரி பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் .எஸ். ரெங்கநாதன் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரித்தனர்.
அப்போது ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இதற்கான விழாவை நடத்த ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா கடந்த 7ம் தேதி தஞ்சையில் இந்த விழாவை நடத்த அனுமதி அளித்தார்.
இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க அவர் கடந்த 7ம் தேதி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவரின் தஞ்சை வருகை 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பாராட்டு விழா இன்று மாலை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வி வெண்கல சிலை நினைவு பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் இன்று தஞ்சை வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications