சொத்து கணக்கு தாக்கல் செய்யாத 1,000 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் 20 பேர்
டெல்லி: நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சுமார் 1,000 பேர், கடந்த 2012ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதில் 20 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் சொத்துக் கணக்கைக் காட்டவில்லை. இந்த மாநிலத்தைச் சேர்ந்த 147 பேரிடம் இருந்து அசையா சொத்துக் கணக்கு வரவில்லை.
இத் தகவலை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த 58 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 53 பேரும், பஞ்சாபைச் சேர்ந்த 48 பேரும், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த 47 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 45 பேரும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 பேரும், ஹரியாணாவைச் சேர்ந்த 35 பேரும், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 25 பேரும், ராஜஸ்தானைச் சேர்ந்த 22 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 17 ஐஏஎஸ் அதிகாரிகளும் அசையா சொத்துக்களின் விவரத்தை தாக்கல் செய்யவில்லை.
அதே போல அருணாசல பிரதேசம், கோவா, மிசோரத்தைச் சேர்ந்த 114 அதிகாரிகளும், மணிப்பூர், திரிபுராவைச் சேர்ந்த 100 பேரும், காஷ்மீரில் 96 பேரும், மத்திய பிரதேசத்தில் 88 அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 6,217 ஐஏஎஸ் அதிகாரிகள் பதவிகள் உள்ளன (இதில் 1,339 பேர் ஐஏஎஸ் தேர்வு எழுதாமல் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் அந்தஸ்து பெறுபவர்கள்). இப்போது 4,737 பேர் தான் பதவிகளில் உள்ளனர்.
இவர்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் தங்களது சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பதவி உயர்களை மறுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.












Click it and Unblock the Notifications