சென்னையில் பிரபல காண்டிராக்டர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை: போலீசாருக்கு கடிதம்
சென்னை: தொழில் நஷ்டம், கடன் தொல்லை காரணமாக சென்னையில் பிரபல காண்டிராக்டர் ஆனந்தன் பிள்ளை காரில் உட்கார்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் பிள்ளை(57). பிரபல ரயில்வே காண்டிராக்டர். அலங்கார் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தை வைத்துள்ள அவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ளார். அவரது முதல் மனைவி ரஞ்சிதம். அவர்களின் மகள் செல்வி. செல்வி தனது கணவருடன் நெல்லையில் வசித்து வருகிறார். செல்வியின் கணவர் லட்சுமணன் பிரபல பஸ் கம்பெனி முதலாளி ஆவார்.
ஆனந்தன் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் தேவ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மூத்த மனைவி ரஞ்சிதம் தனது மகளுடன் நெல்லையில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தன் சென்னையில் பானு என்ற பெண்ணை மணந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனந்தனின் அலுவலகம் பெசன்ட் நகர் ராஜாஜி பவன் பின்புறம் 33வது குறுக்கு தெருவில் உள்ளது.
அவர் நேற்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு தனது மஹிந்திரா பொலிரோ காரில் வந்திறங்கினார். காரை அலுவலக வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு அவர் தனது அலுவல்களை கவனிக்கச் சென்றார். இந்நிலையில் பகல் 11.30 மணிக்கு கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. காரின் முன்பக்கம் கொளுந்து விட்டு எரிந்தது. மேலும் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. இதனால் குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டது.
இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காரின் மீது தண்ணீர் ஊற்றினர். இதற்கிடையே இது குறித்து தகவல் கிடைத்த தீயணைப்பு துறையினரும் அங்கு 2 வண்டிகளில் வந்து தீயை அணைத்தனர். தீயணைக்கப்பட்ட பிறகு காருக்குள் டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி கருகிய நிலையில் ஒரு ஆணின் உடல் இருப்பதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். காருக்குள் பிணமாக கிடந்தவரின் செருப்பு கிடந்தது. அதை வைத்து இறந்தவர் ஆனந்தன் பிள்ளை தான் என்று அடையாளம் காணப்பட்டது. அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தன் பிள்ளையின் தந்தை கந்தசாமி பிள்ளை சம்பவ இடத்திற்கு வந்து இறந்தது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டினார். மேலும் ஆனந்தன் பிள்ளையின் 2வது மனைவி பானு, அலுவலக ஊழியர் ஜெகன், கார் டிரைவர் கேசவன் ஆகியோரும் இறந்தது காண்டிராக்டர் தான் என்று அடையாளம் காட்டினர்.
ஆனந்தன் கார் கதவை பூட்டிக் கொண்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காரில் எரிந்த நிலையில் மண்ணெண்ணெய் கேன் ஒன்றும் கிடந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தன் பிள்ளைக்கு அண்மை காலமாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையில் அல்லாடி வந்துள்ளார். அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன் பிரச்சனையால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கேசவன் மற்றும் ஜெகன் ஆகியோர் தெரிவித்தனர்.
நான் பணிக்கு வந்திருந்தால் முதலாளியை தற்கொலை செய்திருக்க விட்டிருக்க மாட்டேன் என்று கேசவன் தெரிவித்தார்.
இது குறித்து ஜெகன் விசாரணையின்போது கூறுகையில்,
நான் கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன். காலை 11 மணிவரை நான் ஆனந்தன் பிள்ளையுடன் தான் இருந்தேன். நான் தான் அவருக்கு காலை டிபன் வாங்கிக் கொடுத்தேன். அலுவலக மேனேஜர் சந்தானத்தை சந்தித்து அவரிடம் ஒரு கடித்தத்தை கொடுக்குமாறு கூறி என்னை அனுப்பி வைத்தார். கடிதத்தை கொடுக்க அயனாவரத்தில் வசிக்கும் சந்தானத்தின் வீட்டிற்கு நான் பைக்கில் சென்றேன்.
போகும் வழியில் ஆனந்தன் பிள்ளையின் மகள் செல்வி எனக்கு போன் செய்து அப்பாவுக்கு ஏதோ பிரச்சனை என்று தகவல் கிடைத்துள்ளது. போய் என்ன பிரச்சனை என்று பார் என்றார். இதையடுத்து நான் அலுவலகத்திற்கு வந்தேன். இங்கு வந்த பிறகு தான் முதலாளிக்கு நடந்தது தெரிய வந்தது என்றார்.
ஜெகன் கையில் இருந்த கடிதத்தை போலீசார் வாங்கி படித்தனர். அந்த கடிதத்தை ஆனந்தன் பிள்ளை தமிழில் தனது கைப்படவே எழுதியுள்ளார். அது போலீசாருக்கு எழுதப்பட்ட கடிதம்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
காவல்துறை அதிகாரி அவர்களுக்கு, ஐயா, என்னுடைய இந்த முடிவு, சுயமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. இதற்கு யாரும் காரணம் இல்லை என்று அதில் அவர் தெரிவித்திருந்தார். அவர் தொழில் நஷ்டம் காரணமாகத் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று நேற்று இரவு போலீசார் அறிவித்தனர்.
எரிந்த பொலிரோ காருக்கு ரூ. 3 லட்சம் கடன் இருந்துள்ளது. அதனால் தான் அவர் காருக்குள் உட்கார்ந்து தீ வைத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அறிந்த அவரின் முதல் மனைவி மற்றும் மகள் நெல்லையில் இருந்து சென்னை கிளம்பினர். அவர்கள் சென்னை வந்ததும் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தால் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications