''எங்க எஸ்.பி. குழந்தை மாதிரி''... குச்சி மிட்டாய், கரடி பொம்மை கொடுக்க வந்த ஜோதிடர்!!

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவர் ஒரு ஜோதிடர். இவருக்கு ஒரு மகள் இருந்தார். அந்த பெண்ணின் மகன் நாஞ்சில்வளவன். அந்த மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் மோதி நாஞ்சில்வளவன் இறந்துபோய் விட்டதாக அந்த பள்ளி நிர்வாகி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.
ஆனால் பேரன் சாவில் மர்மம் இருப்பதாக ராமன் போலீஸில் புகார் கொடுத்தார். அந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ராமனின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் தங்களது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டனர்.
இதற்கும், பள்ளி நிர்வாகியும், தீவட்டிப்பட்டி போலீசாரும் தான் காரணம் என்றும், மனைவி மற்றும் மகள் ஆகியோர் இறந்ததற்கும் நீதி விசாரணை வேண்டும், என வலியுறுத்தி ஜோதிடர் ராமன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
வாரம் தோறும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வரும் அவர், நூதன முறையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
நேற்றும், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர் கரடி பொம்மை, குச்சி மிட்டாய் ஆகியவற்றுடன் வந்தார். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு ராமன், என் பேரன், மனைவி மற்றும் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது பற்றி எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர் கண்டு கொள்ளவில்லை.
என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், விளையாட்டு குழந்தையின் மன நிலையில் கவனம் செலுத்தி வரும் எஸ்.பி.க்கு கரடி பொம்மையும், குச்சி மிட்டாயும் கொடுப்பதற்காக வந்தேன் என்றார்.
இதையடுத்து ராமனை உள்ளே அனுப்பாமல் அப்படியே திருப்பி அனுப்பினர் போலீஸார்.












Click it and Unblock the Notifications