7 மின் உற்பத்தி நிலையங்கள் மூடல்-மீண்டும் 8 மணி நேரம் மின்வெட்டு அபாயம்!
நெல்லை: கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் 1 யூனிட் உள்பட தமிழ்நாட்டில் 7 மின் உற்பத்தி நிலையங்கள் பராமரிப்பு காரணமாக மூடப்படுவதால் மாநிலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடசென்னை, எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய அனல் மின் நிலையங்கள் மூலம் 2610 மெகாவாட்டும், மத்திய அரசின் பொது தொகுப்பிலிருந்து 2559 மெகாவாட்டும் மி்ன்சாரம் கிடைக்கிறது. ஆனால் மத்திய தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு 3574 மெகாவாட் மின்சாரம் நமக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டும் 1015 மெகாவாட் குறைவாகவே வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 22 நீர் மி்ன் உற்பத்தி நிலையங்களிலிருந்து 174 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. பராமரிப்பு காரணங்களுக்காக சென்னை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் 220 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரு யூனிட்டில் மார்ச் 10ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் கர்நாடகாவில் இருந்து பைகால் அணு மின் நிலையத்தில் 220 மெகா வாட் மின் உற்பத்தியும் 4வது யூனி்ட்டில் நிறுத்தப்பட்டது. இந்த இரு யூனிட்டுகளிலும் இருந்து தமிழ்நாட்டுக்கு 200 மெகாவாட் கிடைத்து வந்த நிலையில் தற்போது மின் உற்பத்தி குறைவால் அந்த மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லை.
இதற்கிடையே ஆந்திரா சிம்காட்ரியில் உள்ள அனல் மின் நிலையத்தின் 500 மெகா வாட் திறன் கொண்ட 3வது யூனிட் நிலக்கரி தட்டுபாட்டால் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 100 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வந்தது.
மேலும் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2வது மற்றும் 6வது யூனிட்டில் தொழில்நுட்ப காரணங்களாலும், அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாலும் அவைகளிலிருந்து 100 மெகாவாட் கூட தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தால் பெற முடியவில்லை.
பாய்லர் கசிவு காரணமாக மாநில அரசுக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 4வது யூனிட்டிலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது யூனிட்டிலும் மின் உற்பத்தி செய்யப்படவில்லை.
இவை இரண்டிலும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது. 7 மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்படுவதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மீண்டும் 8 மணி நேரம் வரை மின்வெட்டை அமுல்படுத்தும் நிர்பந்த நிலையில் மின் வினியோக கழகம் உள்ளது.