டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 1ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. சங்க தலைவர் பில் மாலிக்சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் தேசிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
மத்திய அரசு ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும். சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவு அளிக்கிறது. இந்த போராட்டத்தையொட்டி வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சுமார் 5 லட்சம் சரக்கு லாரிகள் ஓடாது.
தமிழக அரசு டீசலுக்கு 21.4 சதவீதமும், பெட்ரோலுக்கு 27 சதவீதமும் வாட் வரி வசூலிக்கிறது. மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தும்போது அண்டை மாநிலங்களில் வரி குறைக்கப்பட்டு விலை உயரச் செய்யாமல் இருப்பது போன்று தமிழக அரசும் வாட் வரியைக் குறைத்து விலை உயர்வை அதுவே ஏற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications