கணக்கு பரிட்சையில பெயிலாருவோமோ? பிளஸ் 2 மாணவன் தற்கொலை முயற்சி
வாடிப்பட்டி: பிளஸ் 2 கணித தேர்வு கடினமாக இருந்ததால், மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் தேர்வு அறை மாடியில் இருந்து கீழே குதித்து காயமடைந்தார் மாணவன் ஒருவர். இப்போது கால்களில் கட்டுப்போட்டு மருத்துவமனையில் படுத்துக் கிடக்கிறார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் நந்தகுமார்(17). இவர் வாடிப் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணித பிரிவில் படித்து வருகிறார்.
பிளஸ் 2 கணிதத் தேர்வு வியாழக்கிழமை காலை நடந்தது. வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 2வது மாடியில் உள்ள தேர்வு அறையில் நந்தகுமார் தேர்வு எழுதினார். கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால், விடை எழுத திணறினார். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதோ என அச்சமடைந்தார்.
மனமுடைந்த நந்தகுமா ரால் தொடர்ந்து தேர்வை எழுத முடியவில்லை. திடீரென எழுந்த அவர், தண்ணீர் குடிக்கப் போவதாகச் சொல்லி தேர்வறையை விட்டு வெளியே வந்தார். வேகமாக மாடிக்கு ஏறிச்சென்ற நந்தகுமார், தற்கொலை செய்யும் நோக்கத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் அவரின் கை, கால் மற்றும் இடுப்புப் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். வேதனையில் துடித்த மாணவரின் அலறலை கேட்டு தேர்வறையில் இருந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் ஓடிவந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நந்தகுமார், முதலுதவிக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கணக்கு கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்றும் மதிப்பெண் குறைந்தால் வீட்டில் திட்டுவார்களே என்று பயந்தே மாடியில் இருந்து குதித்து விட்டதாக தெரிவித்தார் நந்தகுமார்.












Click it and Unblock the Notifications