தேசிய அரசியலுக்கு தாம் வருவதை யாராலும் தடுக்க முடியாது: மோடி சூசக தகவல்

டெல்லியில் இந்தியா டுடே சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் நேற்று நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். கல்வி, ராணுவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் 2 மணி நேரம் நரேந்திர மோடி உரையாற்றினார்.
நரேந்திர மோடி உரையின் தொகுப்பு:
இன்னாரைப் போல் உருவாக வேண்டும் என்று என் வாழ்க்கையில் இதுவரை எண்ணியதே கிடையாது. ஏதாவது செய்ய வேண்டும் என எப்போதுமே முயற்சித்துள்ளேன். பெரும்பாலும், யாரைப்போலாவது, ஆளாகி, இறப்பதையே மக்கள் விரும்புகின்றனர். ஆனால் இதை நான் பின்பற்றியது இல்லை. குஜராத்தின முதல்வராக பதவி ஏற்கும் வரை இதைப்பற்றி நான் கனவிலும் எண்ணியது இல்லை. நான் முதல்வர் ஆவேனா? என எந்த ஜோதிடரையும் சந்தித்து கேட்டதில்லை.
ஒருவரைப் போல் ஆவதற்கு நாம் கனவு காணக் கூடாது. நாம் செய்வதைப் பற்றி சிந்திக்க வேண்டும். குஜராத்தின் ஆட்சி நல்ல முன்மாதிரி என்றால், இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தகுந்தது தான். இதற்காக நான் அங்கு போக வேண்டும் என்பதில்லை. ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்.
குஜராத்தியர்கள் எப்போதும் தமது தேசம் என்பதில் பெருமை கொள்கிறார்கள். ஏன் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்றே பொதுவான கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் குஜராத்தியர்கள், ஆம், நாங்கள் குஜராத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறோம்' என சொல்லுபவர்கள்.நாட்டில் இந்து முஸ்லீம் என்ற கேள்விக்கு இடமே இல்லை. வாக்கு வங்கி அரசியல் செய்பவர்கள்தான் சிறுபான்மையினர் பற்றி பேசுகிறார்கள். கூட்டணி அரசியல் என்பது நாட்டின் பிரச்சினை இல்லை. தற்போதைய மத்திய அரசு செய்ய நினைத்த நல்ல செயல்பாடுகளை கூட்டணி அரசியல் தடுத்துவிட்டது. முதலில் செய்வதற்கு ஆர்வம் வேண்டும். அது மட்டும் தான் தேவை.
ஒவ்வொரு பிரச்சினைக்கும், புதுப்புது சட்டங்களையும் மசோதாக்களையும் பரிந்துரை செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவுக்கு இப்போது தேவை சட்டங்கள் இல்லை. செயலில் இறங்குவதுதான். நான் இப்போது டெல்லியில் தானே நிற்கிறேன். யாராவது என்னை தடுத்தார்களா? இது டெல்லிதானே? அதை யாரும் தடுக்க முடியாது. இந்தியா ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடாக வரவேண்டும். குஜராத்தில் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம், விரைவில் அது நடைமுறைக்கு வரும்.
இந்தியா சீனாவை முந்துவதற்கு இரண்டு ஆயுதங்கள் உண்டு. ஒன்று ஜனநாயகம் மற்றொன்று இளைஞர் சக்தி. இவை இரண்டையும் பயன்படுத்தும் போது நாம் சீனாவை விட வலுவான நாடாக வளரும் என்றார் அவர்.
முன்னதாக குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications