கொலைகார மாலுமிகள் விவகாரம்- இத்தாலி தூதரை கைது செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிடும்?

கேரளாவில் தங்கி தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அரபிக் கடற்பரப்பில் மீன்பிடித்த போது இத்தாலிய மாலுமிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 2 இத்தாலிய மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக சொந்த நாடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்த இருவரும் அண்மையில் உச்சநீதிமன்ற அனுமதியுடன் தேர்தலில் வாக்களிக்க இத்தாலி சென்றனர்.
ஆனால் அங்கு சென்ற பின்னர் இத்தாலி அரசு இருவரையும் இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதனால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இத்தாலியின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் இத்தாலி தூதரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறிய இத்தாலி தூதர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகிறது. எனவே உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறிய இத்தாலி தூதர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது. அனேகமாக இத்தாலி தூதரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications