ஆஸ்திரேலிய தலைநகரில் தமிழர் நீதிக்கான எழுச்சிப் பேரணி: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கான்பெரா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடந்த எழுச்சிப் பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் மாபெரும் பேரணி நடந்துள்ளது.

கான்பெராவில் மாபெரும் பேரணி
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட எழுச்சிப் பேரணி கடந்த 13ம் தேதி கான்பெராவில் நடந்தது. நண்பகல் 12 மணிக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் முன்பு பேரணி துவங்கியது.

பாலச்சந்திரன் போட்டோவுடன் பேரணி
இந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி, மெல்போர்ன் ஆகிய பெருநகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கான்பெரா வந்திருந்தனர். அவர்கள் கையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பும், கொல்லப்பட்ட பிறகும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடங்கிய பதாகைகளை பிடித்துச் சென்றனர்.

போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்
இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டியதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதியான நீடித்து நிலைக்கக்கூடிய சுதந்திரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த எழுச்சிப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரை
பேரணியில் கலந்து கொண்ட கிரீன் கட்சித் தலைவரும், செனட்டருமான கிறிஸ்ரின் மிலின், செனட்டர் லீ ரியானன், ஜனநாயக தொழிற் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜோன் மடிகன், லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சருமான பிலிப் ருடொக், ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மிசால் ரோவ்லன் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினர்.
தமிழர்களுக்கான நீதிகிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை வலியுறுத்திய தமிழர் நீதிக்கான செயலணியின் பேச்சாளர் ரேவர் கிராண்ட் கூறுகையில், இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற எந்த தீர்மானமும், தமிழர்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும் என்றார்.

ஆஸ்திரேலிய அரசு பிரதிநிதிகளிடம் மனு அளித்தல்
இந்த பேரணியின்போது ஆஸ்திரேலிய அரசு பிரதிநிதிகளிடமும், ஏனைய நாட்டு தூதரக பிரதிநிதிகளிடமும், ஆஸ்திரேலிய தமிழ் மக்களின் கோரிக்கைகள் தாங்கிய மனுக்கள் அனைத்து ஆஸ்திரேலிய அரசியல் தமிழ் அமைப்புக்களின் சார்பில் அளிக்கப்பட்டன.

தூதரகங்களிலும் மனு கொடுத்தல்
பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய தூதுரகங்களுக்கு பேரணியாகச் சென்று தமிழர்களிள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.

3 மணிநேரம் நடந்த பேரணி
ஆஸ்திரேலிய தலைநகரில் உணர்வெழுச்சியுடன் திரண்ட தமிழர் நீதிக்கான பேரணி மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications