மஹிந்திரா நிறுவன அதிபரின் சகோதரி மகன் பைக் விபத்தில் பலி

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் சகோதரியின் மகன் கவீஷ் நாத் (32). ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பாஸ்டன் கன்சல்டிங் குரூப்பில் பணிபுரிந்த அவர் தனது மாமாவின் கம்பெனியில் பணியாற்ற இந்தியா வந்தார்.
மஹிந்திரா குழுமத்தில் சேரும் முன்பு அவர் கோவாவில் பொழுதைக் கழித்து விட்டு வரச் சென்றார். ஸ்கூபா டைவரான கவீஷ் தனது திறமையை மேலும் வளர்க்க ஸ்கூபா டைவிங் பயிற்ச்சி எடுக்கவும் தான் கோவா சென்றார்.
கோவாவில் அன்ஜுனா என்ற இடத்தில் நேற்று பைக்கில் சென்ற கவீஷ் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர் பலியானார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் ராகுல் கௌஷிக்கை கைது செய்தனர். ஆனால் அவர் நேற்றே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் ஆனந்த் மஹிந்திரா தனி விமானம் மூலம் கோவா விரைந்து சென்றார்.
இது குறித்து ஆனந்த் கூறுகையில்,
இது எங்கள் குடும்பத்தை அதிர வைத்த செய்தி. கவீஷ் ஒரு புத்திசாலி பையன். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். கண்டபடி கார் ஓட்டி அவன் மீது மோதியவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும். போலீஸ் அவர்களின் பணியை செய்வார்கள் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் நீதி கிடைப்பது தொடர்பாக கோவா முதல்வர் மனோகர் பாரிகருடன் தொடர்பில் இருப்பேன் என்றார்.
கார் டிரைவர் ராகுல் குடிபோதையில் இருந்தாரா என்பதை அறிய போலீசார் பரிசோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications