ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டுக்கு உத்தரவிட்டது நாராயணசாமி: சோனியா 'காய்ச்சி' எடுத்தார்!

பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் என்றே அதிகமாக வெளியில் தெரியப்பட்ட நாராயணசாமியிடம் தான் Department of Personnel and Training துறை உள்ளது.
இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை தான் சிபிஐயின் செயல்பாடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்றன.
ஆனாலும் சிபிஐயின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் நாராயணசாமியின் கையில் தான் உள்ளது.
இந் நிலையில் தான், காங்கிரஸ் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதாகக் கருதி, இன்று காலை டெல்லியில் இருந்து 7 அதிகாரிகளை அனுப்பி ஸ்டாலினின் வீட்டில் ரெய்ட் நடத்த வைத்துள்ளார் நாராயணசாமி என்கிறார்கள்.
இந்த விவரம் தெரியவந்தவுடன் காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு நேரடியாகவே நாராயணசாமியைக் கூப்பிட்டுப் பேசியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிபிஐ ரெய்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் நாராயணசாமியை தொலைபேசியில் பிடித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரை வாட்டி எடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.
ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் பேசாமல், பிரதமருக்குத் தெரியாமல் நாராயணசாமி இந்த வேலையை செய்திருப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஸ்டாலின் மீதான ரெய்டுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சிதம்பரம், பாஜக, இடதுசாரிகள் என அனைத்துத் தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பவே, நாராயணசாமி மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறதா காங்கிரஸ் தலைமையா என்பதும் தெரியவில்லை.
முன்னதாக இந்த ரெய்டுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான கமல்நாத்தும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications