விஷ வாயு.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு: மக்கள் போராட்டம்-ஆட்சியர் நோட்டீஸ்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சில இடங்களில் நச்சு வாயு பரவிய விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலைக்கு அம் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்படுவதால் இழுத்து மூட வலியுறுத்தி போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆட்சியர் நோட்டீஸ்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கருதி அந்நிறுவனத்தின் மீது தூத்துக்குடி கோட்டாட்சியரால் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 133-ன் கீழ் தொழிற்சாலையில் உள்ள கந்தக அமில ஆலையை ஏன் மூடக் கூடாது என்று ஐந்து தினங்களுக்குள் (மார்ச் 28-க்குள்) விளக்கம் தெரிவித்திட அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்ட அறிவிப்பு
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது தொடர்பாக தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல், பாத்திமா பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலை கழக அம்புரோஸ், மண்டல தலைவர் குமார், பயணிகள் நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம், வணிகர் பேரவை மாநில துணை தலைவர் பொன்.தனகரன், மாவட்ட செயலாளர் ஈசுவரன், பொருளாளர் பெருமாள், தியாகி பொன்னையா பிள்ளை, ஷாஜகான், சம்சுதின், வீராங்கனை அமைப்பு மனோன்மணி, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலையை மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. தற்போது தடை ஆணை பெறப்பட்டு வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த ஆலையில் இருந்து தினமும் நச்சுப்புகை வெளியேறிக் கொண்டு இருக்கிறது. இதனை மக்கள் சுவாசித்து வருகிறார்கள். இந்த ஆலை இருக்கும் ஒவ்வொரு நாளும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடக்கிறது.
28-ல் ஆலை முற்றுகை
வருகிற 28ந் தேதி ஆலை முற்றுகை போராட்டம் நடைபெறும். அதற்காக ராஜாஜி பூங்கா முன்பு திரண்டு, ஆலை முன்பு சென்று முற்றுகையிட உள்ளோம். அன்று பிற்பகல் வரை வியாபாரிகள் கடையை அடைத்து போராட்டம் நடத்த வேண்டுகோள் விடுக்கிறோம். இதை மக்கள் போராட்டமாக நடத்த முடிவு செய்து உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications