மாணவர்கள் போராட்டம்: மூடப்பட்ட கல்லூரிகள் எப்பொழுது திறக்கப்படும்?
சென்னை: மாணவர்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் எப்பொழுது திறக்கும் என்று தெரியவில்லை.
தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கையில் நடந்தது இனப் படுகொலை, போர்க்குற்றம் என பிரகடனம் செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டன. அப்படி மூடப்பட்டாலும் மாணவர்கள் போராட்டம் முன்பைவிட தீவிரமானது.
இந்நிலையில் மூடப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கல்லூரிகள் திறக்கப்பட்டதாக தெரியவில்லை. இது குறித்து தற்போது வரை அரசு தரப்பில் உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று கல்லூரிகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்த மாணவர்கள் அறிவிப்பு எதுவும் இல்லாததால் டிக்கெட்டுகளை ரத்து செய்தனர்.
தங்கள் பிள்ளைகள் சிறு தவறு செய்தாலே கடுமையாக கண்டிக்கும் பெற்றோர்கள் இலங்கை பிரச்சனைக்கு ஆதரவாக தங்கள் பிள்ளைகள் போராடுவது குறித்து மகிழ்ச்சியோடு அவர்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டுகளை 25 சதவிகிதம் கட்டணம் தள்ளுபடியனாலும் பரவாயில்லை என்று கூறி அடுத்து கல்லூரி திறக்கும் நாள் அறிவிப்பு வந்தப்பின் முன் பதிவு செய்யலாம் என்று கூறி வருகின்றனர்.
மேலும் நேற்று திருச்சியில் நடந்த மாணவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 27ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications