சஞ்சய் தத்தை விடுவிக்கக் கோரி மகாராஷ்டிரா ஆளுநரை சந்திக்கும் ஜெயபிரதா, அமர்சிங்
மும்பை: நடிகையும், எம்.பி.யுமான ஜெயபிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விடுவிக்கக் கோரி மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்து பேசிவிருக்கின்றனர்.
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் அளித்த 6 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளாக குறைத்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. சஞ்சய் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்ததால் அவர் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருக்க வேண்டும்.
அதன்படி சஞ்சய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பத்திரிக்கை கவுன்சில் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு மாநில ஆளுநர் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை வைத்து சஞ்சய் தத்தை சிறை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியும் என்று கூறினார். இதையடுத்து சஞ்சய் தத்தை விடுவிக்கக் கோரி நடிகையும், லோக்சபா எம்.பி.யுமான ஜெயபிரதா மற்றும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அமர் சிங் ஆகியோர் மகாராஷ்டிரா மாநில ஆளுநரை இன்று சந்தித்து பேசவிருக்கின்றனர்.
அவர்கள் இன்று மாலை 6.45 மணிக்கு ஆளுநரை சந்திக்கக்கூடும் என்று ராஜ்பவன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பாலிவுட் நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களுமான சத்ருகன் சின்ஹா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications