6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் சஸ்பென்ட் ஓராண்டிலிருந்து 6 மாதமாக குறைப்பு!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் காலத்தை ஓராண்டில் இருந்து 6 மாதமாக குறைத்து சபாநாயகர் தனபால் அறிவித்திருக்கிறார்.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன் புகழ்ந்து பேசியதால் இதர தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவரைத் தாக்க முயன்றனர். இதைத் தடுக்க முயன்ற மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சபையின் உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உரிமைக் குழுவின் பரிந்துரையை ஏற்று 6 தேமுதிக எம்.எல்.ஏக்களையும் ஓராண்டு காலத்துக்கு சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்திருந்தார். இதற்கு தேமுதிக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டசபை வரலாற்றில் இதுபோல் முன் எப்போதும் தண்டனை விதிக்கப்பட்டதை இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் தேமுதிக எம்.எல்.ஏக்களின் தண்டனையைக் குறைக்க வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைப்படி அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் தண்டனைக் காலத்தை 6 மாத காலமாகக் குறைத்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதை ஏற்று 6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் சஸ்பென்ட் காலத்தை ஓராண்டில் இருந்து 6 மாத காலமாக குறைக்கப்படுகிறது என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications