மாணவர் போராட்டத்தை தோற்கடிக்கவே கல்லூரிகளுக்கு ஜெ. விடுமுறை அறிவித்தார்- ஸ்டாலின்
சென்னை: இலங்கை விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் வெற்றி பெறக்கூடாது, நீர்த்து போய்விட வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதா கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து மூட செய்துள்ளார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சென்னையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,
ஆட்சியில் திமுக இல்லாத காலத்திலேயே, ஆட்சிக்கு வருவோமா- மாட்டோமா என்று நினைக்கும் காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக திமுக பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நமது ஆட்சியே பறிபோனது. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதுகூட போராட்டம் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம். மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினோம்.
எம்.பிக்கள் போய் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்கள். இதற்கு மேல் வேறு எவரும் செய்ய முடியாது என்ற நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறோம். இதற்கு மேல் எந்த தியாகத்தையும் நாங்கள் செய்தோம் என்று யாராவது சொல்ல முடியுமா?.
எம்.எல்.ஏ. பதவி இழந்து, ஆட்சி இழந்து, இப்போது அமைச்சர் பதவியையும் இழந்து வந்திருக்கிற இவ்வளவு பெரிய தியாகத்தை இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் உள்பட யாராவது செய்ய முடியுமா?. எங்களை குறை சொல்லும் யாராவது திமுக செய்த தியாகத்தில் எதையாவது செய்திருக்கிறார்களா?.
டெசோ இயக்கம் புது வேகத்தில் இயங்கிய பிறகுதான் மாணவர்கள் போராட்டத்திற்கு ஒரு உற்சாகம் ஏற்பட்டது. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கிறது. ஆனால், அந்தப்போராட்டம் வெற்றி பெறக்கூடாது, நீர்த்து போய்விட வேண்டும் என்பதற்காகத்தான் ஜெயலலிதா கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து மூட செய்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications