விமானப் படை தேர்வுக்கு தயாராக ஆசிரியர் வேண்டும்: டெல்லி கற்பழிப்பு வழக்கு குற்றவாளி கோரிக்கை
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவியை கற்பழித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான நேர்முககாணலுக்கு தயாராக தனக்கு ஒரு ஆசிரியரை நியமிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டு இறந்தார். இந்த வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பேருந்து ஓட்டுனர் ராம் சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான வினய் சர்மா என்பவர் வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்திய விமானப் படையில் சி கிரேட் பிரிவில் பணியாற்றுவதற்கான நேர்முககாணலுக்கான கடிதம் வந்துள்ளது. அதற்கு தயாராக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில்,
இந்திய விமானப் படையில் இருந்து நேர்முககாணலுக்கான கடிதம் வினய்க்கு வந்துள்ளது. அதற்கு தயாராக அவருக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். தேர்வில் பொது அறிவு குறித்த கேள்விகள் கேட்பார்கள். அவர் நல்ல வேலையை வாங்கி, நல்லபடியாக வாழ்வார். மேலும் நன்றாக சம்பாதிப்பார். அவர் குடும்பமே அவரை வருவாயை நம்பித் தான் இருக்கிறது. அவர் இந்திய விமானப் படையில் பணியாற்றுவார் என்றார்.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications