சென்னை ஆல் இந்தியா ரேடியோவிற்கு பூட்டுப் போட திரண்ட மாணவர்கள் கைது
சென்னை: சென்னையில் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும், தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அலுவலகங்களில் முற்றுகை, சாலை மறியல், உண்ணாவிரதம், ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலையில் கலங்கரை விளக்கம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர்.
உருவபொம்மை எரிப்பு
இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து முழக்கமிட்டனர். பின்னர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை பாடை கட்டி எடுத்து வந்து ஒப்பாரி வைத்து அழுத மாணவர்கள் சிறிது நேரத்தில் உருவபொம்மையை எரித்தனர்.
இதைத்தொடர்ந்து கையில் பூட்டுகளுடன் வானொலி நிலையத்தை நோக்கி சென்ற மாணவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே மாணவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்கள் அனைவரையும் போலீசார் தூக்கிக் கொண்டுபோய் வேன்களில் ஏற்றினர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் பிரச்சினை உருவானது. பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் 2 வேன்களில் அருகில் உள்ள திருமண மண்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக வானொலி நிலையத்தை சுற்றி போலீசார் சுமார் 5 இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். மெரீனா கடற்கரையில் இருந்து சாந்தோம் வீதியாக அரசு பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வேறு எந்த வாகனமும் அந்த வழியே செல்லவில்லை.
பல்லாவரத்தில் மறியல்
இதேபோல் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கல்லூரி அருகே ரேடியல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றினர். குறைந்த அளவே போலீசார் பாது காப்பு பணியில் இருந்ததால் மாணவர்கள் பஸ்சின் ஜன்னல் வழியே எகிறி குதித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications