திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு ஓராண்டாகியும் ஒண்ணுமே கண்டுபிடிக்கலை
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டும் கூட இன்னும் ஒரு க்ளூ கூட கிடைக்காமல் தடுமாறி வருகின்றனர்.
திருச்சியில்,கடந்த 29.03.2012 அன்று காலையில் வீட்டில் இருந்து வாக்கிங் சென்ற ராமஜெயம் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் தான் தெரியவந்தது அவர் முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலையாகி கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து திருச்சி காவல்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது. விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் வழக்கு விசாரணை கடந்த 27.06.2012 அன்று சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற எத்தனையோ கொலைகளுக்கு ஏதாவது ஒரு துப்பு கிடைத்து கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் ஆனால் ராமஜெயம் கொலை வழக்கில் யார்? எதற்காக செய்தார்கள் என்பதைக்கூட போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அண்ணனின் சாம்ராஜ்யம்
கடந்த தி.மு.க ஆட்சியில் தனது அண்ணன் K.N.நேருவின் அனைத்து அரசுத்துறை, கட்சி சம்பந்தமான எல்லா பேரங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர் ராமஜெயம். ரியல்எஸ்டேட், கல்குவாரி கான்ட்ராக்ட் , கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சகல வழிகளிலும் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியதும், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தார்.

ஏஜென்டாக இருந்து எம்.டி ஆன ராமஜெயம்
திருச்சியில் சாதாரண ஏர்செல் நிறுவனத்தின் ஏஜண்டாக பணியை தொடங்கி அண்ணனின் செல்வாக்கால் குவாரி கான்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை, ‘ஜனனி' மினரல்ஸ், ‘கேர் காலேஜ்' என தனது சாம்ராஜ்ஜியத்தை உயர்த்தினார். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா என பரந்து விரிந்த வர்த்தக தொடர்பு மூலமாகவும் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகவும் மாறினார்.

கொலையானது எப்படி
ஆட்சி மாறிய உடன் காட்சிகளும் மாறியது. அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நில மோசடி வழக்கில் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராமஜெயம் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனார். இதனையடுத்து ஒரு மாதத்தில் விடுதலையான அவர், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

நெருக்கமானவருக்கு தொடர்பு
கடத்தப்பட்ட ராமஜெயம் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அவரின் பின்னர் தலையில் பலத்த காயம் இருந்தது. அதேபோல் முன்நெற்றியிலும் காயம் இருந்தது. எனவே ராமஜெயத்துடன் நெருங்கி பழகியவர்கள்தான் அவரை அருகில் இருந்து தலையில் தாக்கி கழுத்தை நெரித்து கொன்றிருப்பதாக போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

திருச்சி போலீஸ் டூ சிபிசிஐடி
இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி மாநகர போலீசார் விசாரித்தனர். அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரி, டி.எஸ்.பி. பெரியசாமி மற்றும் 12 தனிப்படை ராமஜெயம் வழக்கில் பல கோணங்களில் விசாரணை நடத்தியது. ஒருவருடமாக நடந்து வரும் விசாரணையில் கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

3000 செல்போன்கள், 1500 பேரிடம் விசாரணை
ராமஜெயம் கொலைக்கு மொத்தம் 60 காரணங்கள் இருக்கலாம் என பட்டியல் போட்டு ஒவ்வொரு காரணத்திலும் ராமஜெயத்துடன் மோதியவர்கள் பெயர்களை எழுதி விசாரணை நடத்தியும் வருகின்றனர். மொத்தம் 3 ஆயிரம் செல்போன் எண்களைத் திரட்டி இதுவரை 1500 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதாவது இந்த வழக்கில் மொத்தம் 105 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி ஐந்து பேரை மட்டும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறதாம் சிபிசிஐடி.

பெண் தொடர்பால் கொலையா?
காதல் திருமணம் செய்த இரண்டு பெண்கள் ராமஜெயம் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், பாதிக்கப்பட்ட நபர்கள் ராமஜெயத்தை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.

வாக்கிங் போனது உண்மையா?
சம்பவம் நடந்த தினத்தன்று ராமஜெயம் வாக்கிங் போனதாகவும், அவரை கடத்தி சென்ற மர்மநபர்கள் கொலை செய்து கல்லணை அருகே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ராமஜெயம் வாக்கிங் போனதாக சொல்லப்படுவதே உண்மையா? பொய்யா என இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் சிபிசிஐடி திணறிவருகிறது.

காணாமல் போன செல்போன்
ராமஜெயம் கொலையாகி கிடந்த இடம் அவருடைய சொந்த இடம் என்பது மட்டுமே சிபி சிஐடி உறுதி செய்துள்ளது. இதுதவிர காணாமல் போன ராமஜெயத்தின் செல்போனும் கிடைக்கவில்லை.

இன்டர்போல் விசாரணை
இப்போது ராமஜெயம் கொலைக்கு வெளிமாநிலம், வெளிநாட்டு, தொழில் பிரச்சினை காரணமாக இருக்கலாமா? என்ற புதிய கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே சிங்கப்பூர், இத்தாலி, இந்தோனேஷியா நாடுகளிலும் ராமஜெயத்தின் தொழில் நண்பர்கள் பற்றியும், பணப் பறிமாற்றம் பற்றியும் விசாரணை நடத்த "இண்டர்போல்" போலீஸ் உதவியையும் நாடி உள்ளனர்.

நினைவஞ்சலி கொடுத்த நேரு
ராமஜெயம் கொலை நடந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. ஒருவருடமாக கொலையாளிகள் சிக்காததால் குடும்பத்தினர், வருத்தத்தில் உள்ளனர்.
அவரது சகோதரர் நேரு தமிழகம் முழுவதும் பிரபல நாளிதழ்களில் நினைவஞ்சலி விளம்பரம் கொடுத்துள்ளார். ஓராண்டு சென்றாலும்; எங்கள் கண்கள் நீராண்டு நின்றாலும்; நின் நினைவு நீங்குமா?
உன்னை விட்டால் இந்த அண்ணனுக்கு யாரு? வானிருந்து வாழ்த்தினால் வாழும் நம் வம்சம் என் தம்பியே இப்பொழுது நீ தெய்வாம்சம்! என்று அஞ்சலி செய்தியில் தெரிவித்துள்ளார்.

எந்த ஆசை காரணம்?
இந்த ஓராண்டு காலத்தில் கொலை வழக்குத் தொடர்பாக ஒரு சின்ன துரும்பைக் கூட சிபிசிஐடி போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த மூன்று ஆசைகளும்தான் அழிவிற்கு காரணம். இதில் எந்த ஆசை ராமஜெயத்தின் அழிவிற்கு காரணமாக அமைந்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications