மத்திய அமைச்சர் பேனிபிரசாத்துக்கு மனநிலை பாதிப்பு-டிஸ்மிஸ் செய்க:சமாஜ்வாடி பதிலடி!!
லக்னோ: சமாஜ்வாடி கட்சியை மத்திய அமைச்சர் பேனிபிரசாத் தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பல்ராம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பேனிபிரசாத் வர்மா, வரும் லோக்சபா தேர்தலில் 4 சீட்டுகள்தான் சமாஜ்வாடி கட்சிக்கு கிடைக்கும்...அதன் பின்னர் அந்த கட்சிக்கு சவ ஊர்வலம்தான் நடக்கும் என்று கூறியிருந்தார்.
இதற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி, பேனிபிரசாத் வர்மா அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பேனி பிரசாத் வர்மாவின் மகனுக்கு தேர்தலில் பர்பாங்கி தொகுதியில் டெபாசிட்டு கூட கிடைக்கவில்லை. பைசாபாத் தொகுதியிலும் கூட அவர் டெபாசிட்டை இழந்திருக்கிறார். இப்படி பேனி பிரசாத் வர்மா பேசிவருவதால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக பாதிப்பு என்றார் அவர்.
சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் ஆஸ்ரே குஸ்வாகா கூறுகையில், பேனி பிரசாத்துக்கு மனநிலை பாதித்துவிட்டு. அவரது கணக்குப்படி பார்த்தால் உத்தரப்பிரதேசத்தில் 90 தொகுதிகளுக்கு மேல் கணக்கு வருகிறது. இருப்பதே 80 தொகுதிகள்தானே.. ஊடகங்கள் அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றார் அவர்.