நாளை அனைத்துக் கல்லூரிகளும் திறப்பு: ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்!
தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன.
இந்த வாரத்தில் பல்கலைக் கழக தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
இந்தநிலையில், என்ஜினீயரிங் கல்லூரிகள் வருகிற 3-ந்தேதி திறக்கப்படும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் நேற்று அறிவித்த்தார். அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
''அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 3-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படும். தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் இதே தேதியில் திறக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போகும்?
கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்குரிய பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. செய்முறைத் தேர்வும் நடத்தி முடிக்கப்படவில்லை. எனவே கல்லூரி நிர்வாகிகளும் பெரும்பாலான மாணவர்களும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். கல்லூரிகள் திறக்கப்படுவது தாமதமாவதால் செமஸ்டர் தேர்வுகள் 15 நாட்களுக்கு மேலாக தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்
விடுமுறையை ஈடுகட்ட கூடுதல் நாட்களில் கல்லூரிகளை நடத்தி கொள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புக்களை நடத்தி, பாடங்களை நடத்தலாம் என துணைவேந்தர் கூறினார்.
மற்ற கல்லூரிகளும் நாளையே திறப்பு
இதேபோல மூடப்பட்டுள்ள பிற கலை, அறிவியல்கல்லூரிகளும் நாளையே திறக்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.